விருதை - தொழுதுார் நான்குவழி சாலைக்கு அளவீடு துவக்கம்: பயண நேரம் குறைவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பெண்ணாடம்: விருத்தாசலம்-தொழுதுார் சாலை, நான்குவழி சாலையாக தரம் உயர்த்த 'ட்ரோன்' மூலம் அளவீடு பணி துவங்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் - தொழுதுார் சாலை வழியாக திருச்சி, கோவை, மதுரை, கடலுார், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. 7 மீட்டர் அகலமுள்ள இச்சாலையில் குறுகிய பாலங்கள், வளைவான சாலைகளால், விருத்தாசலம் - தொழுதுார் (ராமநத்தம்) வரையிலான 42 கி.மீ., துாரத்தை கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது.
இதனால், திருச்சி - கடலுார், திட்டக்குடி - சென்னை, திட்டக்குடி - சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பயண நேரம் அதிகமானதோடு, வாகன விபத்துக்களும் அதிகரித்தன.
இந்த சாலையில் சந்திக்கும் சி.வி.எஸ்., எனப்படும் கடலுார்-விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, அகலப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. விருத்தாசலம்- உளுந்துார் பேட்டை சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விருத்தாசலம்-தொழுதுார் சாலை சென்னை - கன்னியாக்குமரி தொழிற்தட சாலை (சி.கே.ஐ.சி.,) திட்டத்தில் அகலப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 7 மீட்டர் அகலமுள்ள இச்சாலை 49 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 49 இடங்களில் குறுகிய பாலங்கள், 10க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான வளைவுகள் சரி செய்யப்பட்டன.
ஆனால் கனரக மற்றும் இலகுரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குறுகிய சாலையில் விபத்து, உயிரிழப்புகள் மற்றும் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து, விருத்தாசலம்-தொழுதுார் சாலையை நான்குவழி சாலையாக தரம் உயர்த்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த 1ம் தேதி நடந்த சட்டசபையில் அமைச்சர் வேலு, விருத்தாசலம் - தொழுதுார் மாநில நெடுஞ்சாலையை முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் நான்குவழி சாலையாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இதற்காக முதற்கட்டமாக 'ட்ரோன்' மூலம் கருவேப்பிலங்குறிச்சி முதல் தொழுதுார் (ராமநத்தம்) வரையிலான சாலை அளவீடு, சாலை அகலம், ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு பணிகள் நடந்தது.
இதனால், விருத்தாசலம் - தொழுதுார் இடையே விபத்துகள் குறையும். திருச்சி - கடலுார் இடையே பயண நேரமும் குறையும் என்பதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விருத்தாசலம்-தொழுதுார் சாலையை தரம் உயர்த்தி நான்குவழி சாலையாக மாற்றப்படும் என அமைச்சர் வேலு அறிவித்தார்.
அதன்படி முதற்கட்டமாக இச்சாலையில் 'ட்ரோன்' மூலமாக சாலையின் துாரம், அகலம் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அடுத்தடுத்து வரும் அரசின் அறிவிப்புக்கு ஏற்றவாறு அடுத்தக்கட்டப்பணிகள் துவங்குவோம்' என்றார்.