வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடல் சித்திரை திருவிழா மே 6 ல் துவங்குகிறது

தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி மே 13வரை எட்டு நாட்கள் நடைபெற உள்ளது.

வீரபாண்டி கவுமாரியம்மன் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயில் சித்திரை விழாவிற்கு தென் மாவட்ட அளவிலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் உத்தரவில் கம்பம் தேர்வு செய்து கண்ணீஸ்வர மூடையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று கம்பம் மற்றும் கரகம் அலங்கரிக்கப்பட்டு முல்லைபெரியாற்றங்கரையில் இருந்து சுமந்து சென்று கோயிலில் கம்பம் நட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தபக்தர்கள் வேண்டுதலுக்காக முல்லை பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர். தினமும் ஏராளமான பக்தர்கள் காலையில் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவது வழக்கம். சித்திரை திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்கிறது.

திருவிழா நாட்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்து அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்வான தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது. அம்மன் 22 நாட்கள் விரதம் இருப்பதால் நைவேத்தியமாக தெள்ளு மாறு மட்டும் படைக்கப்படும். விழா ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Advertisement