உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு பணி

கிருஷ்ணராயபுரம்:
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து, இரண்டாவது நாளாக கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் நேற்று முன்தினம் காலை முதல் கரூர் கலெக்டர் தங்கவேல் நேரில் சென்று கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று காலை கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் துப்புரவு மற்றும் குடிநீர் பணிகளை பார்வையிட்டு பொது மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின், 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாயனுார் பொது நுாலகத்தை பார்வையிட்டார்.
மணவாசி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி
வளாகத்தில், முதல்வர் காலை உணவு திட்டம் தயாரிக்கும் சமையல் கூடத்தின் சுகாதாரம் மற்றும் காலை உணவு தயாரிக்கும் பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சரவணன், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ருக்மணி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement