காதலித்து கை விட்ட பெண் மீது நடவடிக்கை வேண்டும் * எஸ்.பி.,யிடம் காதலன் மனு

நாகர்கோவில்:காதலித்து கைவிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவிலில் எஸ்.பி., ஸ்டாலினிடம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த வாலிபர் கொடுத்த மனு மீது விசாரணை நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் எஸ்.பி.,யிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது: நான் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். தற்போது குஜராத் ஆயில் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். 12-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் பயின்ற கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலிக்க துவங்கினேன். கல்லூரியிலும் இது நீடித்தது. அவளும் என்னை காதலிப்பதாக கூறினார். இருவரும் ஒரே சமூகம் ஒரே மதம் என்பதால் எங்கள் திருமணத்திற்கு தடை இருக்காது என நம்பினேன்.

ஒன்பது ஆண்டுகள் எங்கள் காதல் நீடித்தது. அவளுக்காக எனது ஆசைகள் லட்சியங்களை துறந்துள்ளேன். காவல்துறை பணியில் சேர வேண்டும் என்பது சிறு வயது ஆசை. ஆனால் போலீஸ் வேலை பிடிக்காது என காதலி கூறியதால் அந்த வேலைக்கு தேர்வு எழுதுவதை கூட விட்டுவிட்டேன்.

கல்லூரிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அப்பெண் அடிக்கடி பணம் வாங்கினார். ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொடுத்துள்ளேன். இரு வெள்ளி மோதிரங்கள் மற்றும் 2 கிராம் எடையில் இரண்டு தங்க மோதிரங்கள் கொடுத்துள்ளேன். ஆனால் இப்போது திருமணத்திற்கு மறுத்து வரும் அவர் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார்.

அவளுக்காக எனக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை இழந்துள்ளேன். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலம் பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement