த.வெ.க., கொடியில் யானை விஜய் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

சென்னை:த.வெ.க., கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், அக்கட்சி தலைவர் விஜய் பதிலளிக்க, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், 'த.வெ.க., கட்சி கொடியில், யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

இந்த மனு, சென்னை முதலாவது உதவி சிவில் நீதிமன்ற நீதிபதி கே.வி.சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில், வழக்கறிஞர் பி.ஆனந்தன் வாதிட்டதாவது:

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தை, அசாம் தவிர மற்ற மாநிலங்களில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே பயன்படுத்த முடியும்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில், யானைகள் இடம்பெற்றிருப்பது, தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.

ஏற்கனவே, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியபோது, 'த.வெ.க., கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யும்போது, இது தொடர்பாக முடிவெடுக்கப்படும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, ஏப்.29ம் தேதிக்குள் த.வெ.க., தலைவர் விஜய், பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement