மத்திய அரசின் போலி லிங்க் மூலம் 2 பேரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி 

புதுச்சேரி: மத்திய அரசின் நலத்திட்ட போலி லிங்க் அனுப்பி, இரண்டு பேரிடம் ரூ.1.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லதா. இவரது மொபைல் எண்ணிற்கு, வாட்ஸ் ஆப் மூலம் பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் தொடர்பான லிங்க் வந்துள்ளது.

அந்த லிங்க்கை உண்மை என நம்பி, லதா பதிவிறக்கம் செய்து, பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு உள்ளார். அதன்பின், அவரது கிரெடிட் கார்டில் இருந்து 1 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.

இதேபோல், கோரிமேட்டை சேர்ந்த சுனில் ஜாதவ் என்பவரிடமும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா தொடர்பான போலி லிங்க் அனுப்பி, 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் மோசடியாக எடுத்து ஏமாற்றியுள்ளார்.

மேலும், கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த திருமலை செல்வன் 21 ஆயிரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலு மகாராஜன் 58 ஆயிரத்து 500, வில்லியனுாரை சேர்ந்த ராஜலட்சுமி 37 ஆயிரத்து 870 என 5 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 47 ஆயிரம் 370 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement