பார்க்கிங் கட்டண அறிவிப்பில் குளறுபடி அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் அவலம்

கொடைக்கானல்: - கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங்கில் கட்டண குளறுபடியால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் தீர திண்டுக்கல் கலெக்டர் சரவணன் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழக இடத்தில் தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். இங்கு கார்,டூ வீலர், வேன், டிராவல்ஸ் பஸ் இவற்றிற்கு முறையே கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன. கட்டணங்கள் குறித்த அறிவிப்பு பலகை பார்க்கிங் பகுதியில் இல்லாத நிலையில் இஷ்டம் போல் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதால் வாக்குவாதம் ஏற்படுகிறது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தாமல் வெறுமனே பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நிறுத்தப்படும் வாகனங்கள் முதலில் பதிவு செய்யப்பட்டு புறப்படும் நேரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வாக்குவாதத்திற்கு இடையே கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர். பார்க்கிங் வசதி செய்யப்பட்ட நிலையில் நகர்ப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் போலீசார் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கும் நடைமுறையால் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
பார்க்கிங் கட்டண முறைகளை நெறிமுறைப்படுத்தி வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்து தெளிவான அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்பதே இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ரூ. 200
சென்னை டிரைவர் காமாட்சி,'' சென்னையில் வாகன நிறுத்தத்திற்கு ஒரு நாள் வாடகையாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. கழிப்பறை வசதி, குடிநீர், தங்குமிடம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கொடைக்கானலில் தற்காலிக பார்க்கிங் வசதி செய்யப்பட்ட போதும் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் அவதியுறும் நிலை உள்ளது. மாறாக ஒரு மணி நேரத்திற்கு பஸ்களுக்கு ரூ. 200 வசூலிக்கும் நிலையால் நாளொன்றுக்கு ரூ. ஆயிரம் கணக்கில் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும். தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் ,''என்றார்.
அறிவிப்பு ஏதுமில்லை
டிரைவர் சிவக்குமார்,'' தற்காலிக பார்க்கிங் அமைக்கப்பட்ட நிலையில் வாகனம் நிறுத்தத்திற்கான கட்டணங்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லை . வாகனங்களை பாதுகாக்க காவலர்கள் இல்லை. வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தும் பட்சத்தில் போலீசார் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். பார்க்கிங் அமைக்கப்பட்டது வரவேற்க்கத்தக்க விஷயம் என்ற நிலையில் கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.
வெளியூர் நடைமுறை பொருந்தாது
நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் கூறுகையில்,'' அறிவிப்பு பலகை, கட்டணம் விவரம், அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி உள்ளூர் வாகனங்கள், வெளியூர் சுற்றுலா வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலித்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்திற்கு வாடகை செலுத்த முடியும். வெளியூர் நடைமுறை இங்கு பொருந்தாது. ஒரு வாரத்தில் இவற்றை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
மேலும்
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
டில்லியில் சிறுவன் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட 4 பேர் கைது
-
'மினி டைடல் பார்க்' பணிகள் திருப்பூரில் 2 மாதத்தில் நிறைவு
-
1ம் வகுப்பு மாணவர்களின் டைரி குறிப்பு புத்தகமாகிறது
-
திருப்பதியில் மாடுகள் இறப்பு?
-
மாடு திருடிய வாலிபர்கள் 3 பேரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்