தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நிறுத்தம்

கம்பம் : மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெரும்பாலான ஊராட்சிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் இந்த அவலம் எழுந்துள்ளது.

கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்தியது. கடந்த பல ஆண்டுகளாக கிராமங்களில் வசிப்போர் இந்த திட்டத்தில் பயன் பெற்றனர்.

கடந்த 4 மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்த பொதுமக்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என தமிழக அரசு கூறுகிறது.

தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கியதாக மத்திய அரசு சார்பில் கூறப்படுகிறது. சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியாது என பொதுமக்கள் வேலைக்கு வர மறுத்து விட்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் , நூறு நாள் திட்டத்தின் கீழ் வேலைகள் செய்வது நின்று விட்டது.

இது தொடர்பாக ஊராட்சி செயலர்கள் கூறுகையில், வாரம் ஒரு முறை சம்பளம் வழங்கினோம். 4 மாதங்களாக சம்பளம் வரவில்லை. இன்று, நாளை சம்பளம் வந்து விடும் என்று சரிக்கட்டி வந்தோம்.

ஆனால் சம்பளம் வருவது போல் தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டனர். எனவே ஊராட்சிகளில் இந்த திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவில்லை என்கின்றனர்.

Advertisement