நாராயணத்தேவன்பட்டி - - சுருளிப்பட்டி இணைப்பு சாலை: கிடப்பில் போட்ட அவலம்

கம்பம் : நாராயணத்தேவன்பட்டி -- சுருளிஅருவியை இணைக்கும் பழைய சுருளிரோடு புதுப்பிக்கும் பணி முடிவுற்ற போதும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுருளி அருவி ஆன்மிக தலம், சுற்றுலா தலம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அருவிக்கு குளிக்க வருகின்றனர். சுருளி அருவிக்கு செல்ல தற்போதுள்ள ரோட்டை தவிர்த்து, பழைய சுருளி ரோடு என்ற ரோடும் உள்ளது. நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வழியாக சுருளி அருவிக்கு செல்லும் ரோடு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. விசேஷ நாட்களில் போலீசார் இந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை ரோடு குறிப்பாக 160 மீட்டர் தூரத்திற்கான ரோடு தனியாரிடம் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் அதை மீட்டனர். பின் நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி வரை ரோடு புதுப்பிக்க நடவடிக்கைகள் துவங்கியது. சுருளிப்பட்டியில் ரூ.46 லட்சம் செலவில் பாலம்கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது.

நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் 160 மீ., தூரத்திற்கு ரோடு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக

ரூ. 46 லட்சத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியிருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், பாலம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை உரிய காலக்கெடுவில் பணி துவக்க வில்லை என கூறி அரசு திரும்ப பெற்றது. இந்த பாலம் கட்டப்பட்டால் நாராயணத்தேவன் பட்டியிலிந்து சுருளி அருவிக்கு பைபாஸ் ரோடு போன்று பயன்படும். ஆனால் கம்பம் ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பாலம் கட்டும் பணிகள் இன்று வரை நடைபெறவில்லை.

Advertisement