கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது

மைசூரு : மைசூரு டவுன் கே.ஆர்.மொஹல்லாவில் வசித்தவர் முகமது ஷபி, 39. பைக் மெக்கானிக். இவரது மனைவி ஷப்ரின் தாஜ், 35. ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார். தம்பதிக்கு 12 வயதில் மகள் உள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தம்பதி இடையில் அடிக்கடி, குடும்ப தகராறு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர். கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டு இருந்த, முகமது ஷபி திடீரென உயிரிழந்தார்.

மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக, உறவினர்களிடம் ஷப்ரின் கூறினார். நேற்று முன்தினம் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது முகமது ஷபியின் கழுத்தில் காயம் இருந்ததை குடும்பத்தினர் பார்த்தனர். போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஷப்ரின் மீது கே.ஆர்.போலீசில் புகார் செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலன் அன்வர், 35, என்பவருடன் சேர்ந்து, மொபைல் சார்ஜர் வயரால் கணவர் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

ஷப்ரின், அன்வர் கைது செய்யப்பட்டனர். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்த ஷப்ரின், வேலைக்கு செல்லும்போது அன்வர் ஆட்டோவில் சென்றுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதுபற்றி அறிந்த முகமது ஷபி கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவரை தீர்த்துக்கட்டிவிட்டு போலீசில் இருந்து தப்பிக்க மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது தெரிய வந்தது.

Advertisement