செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு கண்காணிப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழம் நீர் மட்டமும் கொண்டது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில், 6,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது.

இந்த ஏரியின் மேற்புற பகுதியில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல ஆண்டுகளாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், பங்காரு கால்வாய், சவுத்திரி கால்வாய் வழியே அதிக அளவில் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை பராமரிக்கும் நீர்வளத்துறையினர், ஏரியின் மேற்புற பகுதிகளை கண்காணிப்பதே இல்லை.

கழிவு நீர் கலப்பதால், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைகிறது.

தற்போது, ஏரியில் குளிப்பவர்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுகிறது. ஏரியில் அடிக்கடி மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதேநிலை நீடித்தால், எதிர்காலத்தில் ஏரியின் நீர் விஷமாக மாறி, மிக மோசமான நிலை ஏற்படும். மக்களின் குடிநீர் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நீரில் கழிவு கலப்பதை தடுக்க, அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


பூட்டியே கிடக்கும் பராமரிப்பு அலுவலகம்




செம்பரம்பாக்கம் ஏரியின் பராமரிப்பு அலுவலகம், குன்றத்துார் அருகே ஏரியின் கரைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு பகுதியில் உள்ள கேட் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது.மேலும், அலுவலகத்திற்கு என, தொலைபேசி எண் இல்லை. மேலும், ஏரியை பராமரிக்கும் உதவி செயற்பொறியாளரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டாலும், அவர் போனை எடுப்பதில்லை.இதனால், பொதுமக்கள், விவசாயிகள் ஏரி குறித்த தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.

Advertisement