அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு முடிச்சூர் சாலையில் அவதி

தாம்பரம்:தாம்பரத்தில் இருந்து பெருங்களத்துார், முடிச்சூர், மண்ணிவாக்கம் வழியாக ஜி.எஸ்.டி., - வண்டலுார் - வாலாஜாபாத் சாலைகளை இணைக்கிறது, தாம்பரம் - முடிச்சூர் சாலை.

ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரான போக்குவரத்து உடைய இச்சாலையில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கிருஷ்ணா நகர், பெருங்களத்துார், பார்வதி நகர், முடிச்சூர் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவது, கடை நடத்துவது என ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால், அப்பகுதியில் தினமும் 'பீக் ஹவர்' நேரத்தில் நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல், பல இடங்களில் சாலை சீர்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் உள்ளது. இதனால், அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை - போக்குவரத்து போலீசார் இணைந்து, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement