அநியாய பள்ளி கட்டணம் வசூல்  குழந்தைகள் ஆணையத்தில் புகார்

பெங்களூரு: மாநிலத்தில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடக்கிறது. பல தனியார் பள்ளிகளில் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணிகள் போன்றவற்றுக்கு வசூலிக்கப்படும் தொகையும் அதிகமாக்கப்பட்டு உள்ளன.

பெற்றோர் அதிர்ச்சி



இதனால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து பல பெற்றோர், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

அநியாய கட்டண உயர்வு, கட்டணம் செலுத்துவதில் வெளிப்படை தன்மை இல்லாதது, பாடப் புத்தகங்கள், பைகள் போன்றவை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அதுவும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மீதே அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்து உள்ளன.

இது குறித்து, கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நாகன்னா கவுடா கூறியதாவது:

இந்த ஆண்டு மட்டும் 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து உள்ளன. இப்புகார்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி மத்திய பெங்களூரில் இயங்கும் மூன்று தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

கமிஷனருக்கு கடிதம்



அநியாய கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி துறை கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட உள்ளது.

பள்ளி நிர்வாகங்கள் ஆண்டுதோறும் 10 - 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம். தற்போது பல பள்ளிகளில் 30 சதவீதத்திற்கு மேலாகவும், சில பள்ளிகள் 40 சதவீதம் வரையும் கட்டணம் உயர்த்தி உள்ளன.

எனவே, இப்பிரச்னையை அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். எதன் அடிப்படையில் கட்டணங்களை பள்ளிகள் உயர்த்துகின்றன என்பது குறித்து ஆராய வேண்டும்.

சில பள்ளிகளில் மாற்று சான்றிதழ்கள் வழங்குவதற்கு முழு ஆண்டு கட்டணத்தையும் செலுத்துமாறு கூறியதாக புகார்கள் வந்து உள்ளன. இது பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement