கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஓராண்டுக்கும் மேலாக ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றோரத்தில், 50 அடிக்கு மேல் கிணறு தோண்டப்பட்டு, அந்த கிணற்றில் ராட்சத மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் அரவக்குறிச்சி வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக அரவக்குறிச்சி முதல் தவுட்டுப்பாளையம் வரை சாலையோரம் குழி பறிக்கப்பட்டு, பெரிய அளவில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலை வழியாக, குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு, குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த நிலையில், பல இடங்களில் குழிகளை மூடப்படவில்லை.
இதில், தவுட்டுப்பாளையத்தில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் குழாய் பதிக்கும் பணி ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்தது. இங்கு, குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த நிலையில், பள்ளத்தை சரியாக மூடாமல் உள்ளது. அந்த பள்ளத்தை ஒட்டி குவிக்கப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தாமல் உள்ளதால், சாலையில் சிதறி கிடக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், சாலை சேறு, சகதியுமாக மாறி வருகிறது. மழை பெய்தாலே பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது.
இந்த, தேசிய நெடுஞ்சாலையில், தவுட்டுபாளையம் உயர்மட்ட பாலம் அருகே பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கனரக வாகனங்கள் வரும் போது, சாலையோரம், இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கும் போது நிலை தடுமாறி விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரவில், சாலையோரம் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால், விபரீத சம்பவங்கள் நடக்கும் முன் பணி முடிந்த இடங்களில் பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.