ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ.,வுக்கு லட்சுமி கேள்வி

பெலகாவி: ''பிற்படுத்தப்பட்ட ஆணைய தலைவர் மூலம், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியது பா.ஜ., அரசு. அப்போதே அறிக்கையை நிராகரித்திருக்கலாம். இப்போது குற்றம்சாட்டுகின்றனர்,'' என மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்தது பா.ஜ., அரசு. இந்த ஆணைய தலைவர் மூலமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதும் இதே அரசுதான். அறிக்கையில் குளறுபடி உள்ளது என்றால், அப்போதே நிராகரித்திருக்கலாம்.

அதை செய்யாமல், இப்போது சரியல்ல என, குற்றம்சாட்டுகின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் குறைகள் இருப்பதை, நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். எங்கு தவறு உள்ளது என்பது, தெளிவாக தெரியவில்லை.

மக்களை திசை மாற்ற பா.ஜ., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் அரசின் சமூக நலத்திட்டங்கள், ஏழைகளின் முன்னேற்றத்தை சகிக்க முடியாமல் தேவையின்றி குற்றம்சாட்டுகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மட்டுமே நடந்தது. இது பற்றி ஊகங்கள் அடிப்படையிலான செய்தியை நம்ப வேண்டாம்.

என் கார் மீது மோதி, விபத்தை ஏற்படுத்திய டிரக் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநரை பிடிக்க போலீசார் அதிகம் சிரமப்பட்டனர். அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement