நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் துார்தர்ஷன்: அமைச்சர் பாராட்டு

சென்னை : ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

துார்தர்ஷன் பொன்விழா கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. துார்தர்ஷனின் நிகழ்ச்சி பிரிவு தலைவர் சீனிவாசன் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமை தாங்கினார்.

பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, சீனி விஸ்வநாதன், குருவாயூர் துரை, புரிசை கண்ணப்ப சம்பந்தன், தாமோதரன், ஸ்ரீனிவாஸ், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, வேலு ஆசான் ஆகியோருக்கு கவுரவ பரிசு வழங்கினார்.

மேலும், செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி நிறுவனர் மீனா முத்தையா, பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடன இயக்குநர் கலா, நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். பின், அமைச்சர் முருகன் பேசியதாவது:

செய்தியின் உண்மை தன்மையை அறிய விரும்புவோர் துார்தர்ஷன் பார்க்கின்றனர். பொதுவாக மக்களிடம் பொய் செய்தி எளிதாக சென்றடையும். மிக வேகமாக, தவறான செய்தி பரவும்.

அதன் தாக்கம் பெரிதாக இருக்கும். ஆனால், துார்தர்ஷன் செய்தி அதிகாரப்பூர்வமானதாக இருக்கும். அதன் உண்மை தன்மையை வெளியில் தேட வேண்டியதில்லை.

துார்தர்ஷன் செய்தியாளரை, தமிழக அரசின் செய்தித்துறை அலுவலர் செய்தி சேகரிக்க வரக்கூடாது என்று கூறியுள்ளார். இவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து பேசுகின்றனர்.

நேயர்களுக்காக விளக்கம் கேட்டவரை, வரக்கூடாது என்பது ஆணவத்தின் உச்சம். துார்தர்ஷனில் மட்டுமே கருத்து சுதந்திரம் உள்ளது. தமிழகத்தில் தமிழ் தேவை என்பதால், 'டிடி தமிழ்' என்று பெயர் மாற்றம் செய்தோம். நாட்டில், 900 'டிவி' சேனல்கள் உள்ளன. இவற்றில் இந்தியாவின் பாரம்பரியத்தை நிலைநாட்டுவது துார்தர்ஷன்.

சுதந்திர தினவிழா, குடியரசு தின விழா நிகழ்ச்சி, ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி நிகழ்ச்சிகளையும், அரசின் திட்டங்களையும் துார்தர்ஷன் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரசியல், விளையாட்டு, கலாசாரம், விண்வெளி என, அனைத்து துறைகளின் செய்திகளையும் மக்களிடம் சேர்ப்பது துார்தர்ஷன் தான்.

இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனலாக, துார்தர்ஷன் சேனல் உள்ளது. இந்த சேனல், 50ம் ஆண்டை கொண்டாடுகிறது. இதன் நிறைவு விழாவை, பெரிதாக கொண்டாடுவோம்.

'வேவ்ஸ் ஓ.டி.டி.,' தளத்தில், துார்தர்ஷனின் அனைத்து சேனல்களையும் காண முடியும். கிரியேட்டிவ் பொருளாதாரம் எனப்படும், படைப்பு பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

மே 1 முதல், 4 வரை, முதல் முறையாக மும்பையில், 'வேர்ல்டு ஆடியோ விசுவல் என்டர்டெயின்மென்ட் சம்மிட்' நடக்க உள்ளது. இதில், பிரதமர் பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், துார்தர்ஷனின் துணை தலைமை இயக்குநர் கிருஷ்ணதாஸ், மண்டல செய்திப் பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement