விவசாயிகளை கூவிக்கூவி அழைக்குது வேளாண் துறை

பேரையூர்: மத்திய அரசின் அடையாள அட்டை பெற விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளதால் வேளாண்துறையினர் அலைபேசி மூலம் விவசாயிகளை அழைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முகாம் அமைத்தும், இ சேவை மையங்கள் மூலமாகவும் விவசாயிகளின் ஆதார், நில பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றை வைத்து ஒரு மாதமாக பதிவு செய்யும் பணியில் வேளாண்துறையினர் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் கூடுதல் விளைநிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் இந்த அடையாள அட்டை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. தாங்கள் வைத்திருக்கும் கூடுதல் விளை நிலங்களை பதிவு செய்யும்போது சொத்து விவரங்கள் அதிகமாக காட்டப்பட்டு விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். இதனால் வேளாண் துறையினர் வீடு வீடாகச் சென்றும், அலைபேசி மூலம் அழைப்பு விடுத்தும் பதிவு செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement