ரேஷன் கடை, நிழற்கூடம் நாடக மேடை திறப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த மேலப்பகுதி பஞ்சாயத்து, கீழ ஆணைக்கவுண்டம்பட்டியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதையேற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, ஏழு லட்சம் ரூபாயில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து புதிய கட்டடம் கட்டும் பணி முழுமையாக முடிந்து, நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
இதில் கடவூர் யூனியன் கமிஷனர் சுரேஷ்குமார், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல், வீரணம்பட்டி, சமத்துவபுரம் பகுதியில் பயணியர் நிழற்கூடம், தொண்டமாங்கிணம் கிராமத்தில், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நாடக மேடையை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement