வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்

நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஏசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை, சிறப்பு கூட்டு திருப்பலி நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி தேவாலய கலையரங்கில் துவங்கியது.

இரவு 12:00 மணிக்கு உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. நள்ளிரவு 1:30 மணி வரை நடந்த சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, நேற்று மாலை 6:30 மணிக்கு உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்துவின் திருத்தேர் பவனி தேவாலயத்தில் நடந்தது.

Advertisement