கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்

4

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில் காலியான இருக்கைகள் அதிகம் இருந்ததால் அதிருப்தி அடைந்த கட்சி தலைமை மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.



காந்தி, அம்பேத்கரை நினைவு கூரும் வகையில் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் நடத்தி வருகிறது. பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தல்சாகார் மைதானத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூட்டத்தில் உரையாற்றும்போது அங்கு போடப்பட்டிருந்த பெரும்பாலான இருக்கைகளில் யாருமே இல்லை. ஆட்கள் இன்றி இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளது.


அதிக மக்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் கூட்டம் கூடவில்லை. இதனால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைய, அதன் விளைவாக பக்சர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ்குமார் பாண்டேவை சஸ்பெண்ட் செய்துள்ளது.


கட்சியின் அனைத்துவித பதவிகளில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து பீகார் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ராஜேஷ் ரத்தோட் கூறியதாவது;


தல்சாகார் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் போதிய அளவு கூட்டம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாமையே இதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது. எனவே, பக்சர் மாவட்ட தலைவர் மனோஜ்குமார் பாண்டே கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement