நீர்வழி தடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிப்பதால் மூச்சுத்திணறல்

மறைமலைநகர், கருநிலம் ஊராட்சியில், நீர் வழித்தடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்களின் கணிசமானோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் பலர், மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கருநிலம் கிராம எல்லைக்கும், மருதேரி கிராமத்திற்கும் இடையே உள்ள நீர் வழித்தடத்தில் தொடர்ந்து, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், கிராமத்தினர் மர்ம நோய் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

நீர் வழித்தடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் நீர்நிலைகள், விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தொடர்ந்து எரிக்கப்படும் குப்பையின் கரும்புகை காற்றில் பரவி, கிராமத்தில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

மருதேரி கிராமம் திருப்போரூர் ஒன்றியத்திலும், கருநிலம் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திலும் உள்ளதால், யார் நடவடிக்கை எடுப்பது என்பதில், அதிகாரிகளுக்கிடையே போட்டா போட்டி நீடிக்கிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து, மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதையும், எரிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement