தரமற்ற மருந்து விற்ற குஜராத் நிறுவனம் இயக்குனர்களுக்கு கோர்ட் அபராதம்

செங்கல்பட்டு, தரமற்ற மருந்துகள் விற்பனை செய்த, குஜராத் மாநில தனியார் மருந்து நிறுவன இயக்குனர்களுக்கு அபராதம் விதித்து, செங்கல்பட்டு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை, கீழ்கட்டளை பகுதியில், 'ராக்ஸி பயோடெக்' மருந்துகள் மொத்த விற்பனை கடை உள்ளது. இந்த கடையில், சோழிங்கநல்லுார் சரக மருந்துகள் ஆய்வாளர் மற்றும் சிலர், 2015 ஆக., 13ம் தேதி, திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது, தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அப்போது 'அம்லோடின்' என்ற மருந்திற்கு 'சீல்' வைத்தனர். இந்த மருந்துகள், குஜராத் மாநிலத்தில் உள்ள, மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வாங்கப்பட்டது தெரிந்தது.

அதன் பின், அம்லோடின் மருந்தை, அரசு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பியதில், அது தரமற்றது என கண்டறியப்பட்டது.

இதையடுத்து சோழியங்கநல்லுார் சரக மருந்துகள் ஆய்வாளர், இதில் தொடர்புள்ள குஜராத் மாநிலம், காந்திநகர் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆனந்த் அர்ஜூன் ஒதேரா, மீனாட்சி அர்ஜூன் ஒதேரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார்.

செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.

வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவன இயக்குனர்கள் ஆனந்த் அர்ஜூன் ஒதேரா, மீனாட்சி அர்ஜூன் ஒதேரா ஆகியோருக்கு, தலா 20,000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும், நீதிமன்றம் முடியும் வரை தண்டனையும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement