பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார் தாமாக வங்கி கணக்கு துவங்கலாம்: ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது

புதுடில்லி: பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாமாகவே வங்கிக் கணக்கு துவங்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி, வங்கிகள் 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களை, தாமாகவே சேமிப்பு மற்றும் டேர்ம் டிபாசிட் கணக்குகள் துவங்கவும், இயக்கவும் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, சிறார்களுக்கான வங்கி கணக்கு துவக்கம் மற்றும் நடைமுறைகள் குறித்த விதிமுறைகளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, பிறந்த குழந்தையும் கூட, தனது இயற்கையான அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் வாயிலாக சேமிப்பு, டேர்ம் டிபாசிட் கணக்குகளை துவங்க வங்கிகள் அனுமதிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தன்னிச்சையாக வங்கிக் கணக்கு துவங்கவும்; வங்கிகளின் தனிப்பட்ட வரம்புக்கு உட்பட்டு, குறிப்பிட்ட தொகை வரை, தாங்களாகவே பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இணைய வங்கி சேவை, ஏ.டி.எம்., வசதிக்கான டெபிட் கார்டு, காசோலை உள்ளிட்ட வசதிகளை வழங்குவது வங்கிகளின் முடிவுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில்

எப்போதுமே ஏதேனும் இருப்பு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 18 வயது பூர்த்தியானவுடன், கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பத்தை பெற்று, வழக்கமான நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகள் இந்த புதிய வழிகாட்டுதல்களை வரும் ஜூலை மாதத்துக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement