சத்தீஸ்கரில் வேகம் எடுக்கும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை; இன்று மட்டும் 24 பேர் சரண்

பீஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று 24 நக்சல்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு, சரண் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு குழுக்களாக இயங்கி வரும் நக்சல்கள், தொடர்ந்து சரண் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (ஏப்.28) 24 நக்சல்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு, பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 14 பேர் தலைக்கு மொத்தமாக ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. சரண் அடைந்தவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.
இதுகுறித்து பீஜாப்பூர் காவல்துறை அதிகாரி சந்திரகாந்த் கோவர்னா கூறுகையில், 2025 ஜனவரி 1 முதல் தற்போது வரை மொத்தம் 213 நக்சல்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்று மட்டும் 24 பேர் சரண் அடைந்து இருக்கின்றனர். 203 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.