குண்ணவாக்கம் -- அனுமந்தை சாலை பணி கிடப்பில் போட்டதால் கிராமத்தினர் அவதி

மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில் உள்ள குண்ணவாக்கம் -- அனுமந்தை ஏரிக்கரை சாலை, 2 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையைப் பயன்படுத்தி குண்ணவாக்கம், ஈச்சக்கரணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இருசக்கர வாகனங்கள் வாயிலாக மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலை சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து, புதிய சாலை அமைக்க கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு, சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அத்துடன், ஏரிக்கரை ஓரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.
ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்கள் கடந்தும், இன்னும் சாலை பணிகள் துவங்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையை அதிக அளவில், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வேலைக்குச் செல்கின்றனர்.
சாலையில் நிரப்பி வைக்கப்பட்டு உள்ள ஜல்லி கற்கள் குத்தி, வாகனங்களின் 'டயர்'கள் பஞ்சராகின்றன. இதனால், வேலைக்குச் செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல், தடை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, பல்வேறு பணிகளுக்காக செல்வோருக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.