பொங்கலுாரில் போலீஸ் ஸ்டேஷன் முதல்வர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

பொங்கலுர், ; திருப்பூரின் புறநகர் பகுதி என்பதால் பொங்கலுார் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உருவெடுத்து வருகிறது. பல்லடம், காமநாயக்கன்பாளையம், அவிநாசி பாளையம் ஆகிய மூன்று போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக பொங்கலுார் ஒன்றியம் உள்ளது.

கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீண்ட தொலைவில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதால் போலீசாரால் இப்பகுதியை முழுமையாக கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பொங்கலுாரில் புதிதாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பொங்கலுரில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். சமீபத்தில், 4 கோடி ரூபாய் செலவில், ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய கட்டடம் காலியாக உள்ளது. அதனை போலீஸ் ஸ்டேஷனுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தற்போதைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைவதால் இனி ஏற்கனவே உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் பிரிக்கப்படும். எனவே, பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனைத் தேடி நீண்ட தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement