கட்சியிலும், ஆட்சியிலும் காலனியை நீக்க என்ன நடவடிக்கை: முருகன் கேள்வி

சென்னை: மத்திய இணை அமைச்சர் முருகன் அறிக்கை:
'ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால், 'காலனி' என்ற சொல், இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
வாய் ஜாலங்களில் வித்தகர்களான தி.மு.க.,வினர், அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளின் வரிசையில், இதுவும் ஒன்று.
'காலனி' பெயர் நீக்கம் என்பது புரட்சி என, தம்பட்டம் அடிக்கும் தி.மு.க.,வினரை பார்த்து, நான் எழுப்பும் கேள்வி இதுதான். கட்சியிலும், ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே முதல்வர் ஸ்டாலின். அதை நீக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
சட்டசபையில் இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்ட நாளில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகில், ஏர்ணாமங்கலம் ஊராட்சியில் உள்ள பாணம்பட்டு கிராமத்தில், குடிநீர் தொட்டியின் மீது, மர்ம நபர்கள் மனித கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த, 2022 டிச., 16ல் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில், சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில், இரு ஆண்டுகளுக்கு பின், புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கொடூரம் அரங்கேறியது.
தமிழகம் முழுதும், 445 கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில், தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த கொடூர, அவல ஆட்சியின், '2.0'வை மக்கள் பார்க்க வேண்டும் என, ஸ்டாலின் விருப்பப்படுகிறார். ஆனால், இந்த கையாலாகாத, திராணியற்ற தி.மு.க., அரசை, வீட்டுக்கு அனுப்பவே மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

