32 ஆண்டுக்கு பின் புரவி எடுப்பு விழா; சூளை பொட்டலில் தயாராகும் குதிரை

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள புலிகுத்தியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், புரவி எடுப்பு விழா 32 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும் நிலையில் புரவிகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

காரைக்குடி அருகே கல்லுப்பட்டியில் இருந்து புலிகுத்தி செல்லும் வழியில் கண்மாய்கரையில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு விழா நடைபெறும். புலிகுத்தி, கல்லுவயல், பொட்டவயல் ஆகிய கிராமங்கள் சார்பில், மழை பெய்திடவும், விவசாயம் செழித்திடவும் நடைபெறும் இத்திருவிழா 32 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

32 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 கிராமம் சார்பில் இத்திருவிழா நடைபெறுகிறது. கடந்த மாதம் புரவி செய்வதற்கு பிடிமண் வழங்கப்பட்டது.

சூளைப் பொட்டலில் குதிரை செய்யும் பணி நடந்து வருகிறது. 3 காளை, 3 யானை, 31 குதிரை என மொத்தம் 38 புரவிகள் தயாராகிறது. இதில், 31 நேர்த்திக்கடன் புரவிகள் ஆகும். தொடர்ந்து சூளைப் பொட்டலில் இருந்து கூத்து பொட்டலுக்கு குதிரைகள் கொண்டு செல்லப்படும்.

அங்கு சமபந்தி பூஜை நடைபெறும். இரவு, நடைபெறும் நாடகத்தை குதிரைகள் பார்க்கும் என்பது ஐதீகம்.

மே 4 ஆம் தேதி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லப்படும். 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழாவால் 3 கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement