சிங்கபெருமாள் கோவில் - வண்டலுார் 7 இடங்களில் உயர்மட்ட நடைபாலம்; ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு வருகிறது

வண்டலுார்:வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், மைய தடுப்பு சுவரை பாதசாரிகள் எளிதாக கடக்கும்படி, ஏழு இடங்களில், மின் துாக்கி வசதியுடன், உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. பணிகள் முடிந்து, ஆகஸ்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
சென்னையின் நுழைவு வாயிலாக, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலை உள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது.
இதில், வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான 18 கி.மீ., துாரத்தில், ஏழு இடங்களில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இந்த பேருந்து நிறுத்தங்களில், ஒரு முனையில் இருந்து எதிர் முனைக்கு பொதுமக்கள் செல்வதற்கு, சாலையின் நடுவே உள்ள மைய தடுப்பு சுவரை கடக்க வேண்டும். இது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது.
தவிர, பொது மக்கள் கடந்து செல்லும்போது, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்கல்கள் எழுந்தன.
இதனால், ஏழு இடங்களிலும், போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்றாலும், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தொடர் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, குறிப்பிட்ட ஏழு இடங்களிலும், பொது மக்கள் சாலையை எளிதாக கடக்கவும், வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடை பாலம் அமைக்க கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வண்டலுார் இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் டெக் பார்க், வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் சந்திப்பு, மறைமலை நகர் சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் ஆகிய ஏழு இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2024ல், பணிகள் துவக்கப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த உயர்மட்ட பாலங்கள் முழுதும் இரும்பினால் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் இருபக்க இணைப்பிற்கு ஏற்ப, 46 மீ., நீளம் முதல் 48 மீ., நீளம் வரை பாலம் அமைக்கப்படுகிறது.
உயரம், தரை மட்டத்திலிருந்து 5.5 மீ., என்ற அளவில் அமைக்கப்படுவதால், கண்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இடையூறின்றி பயணிக்கும். தவிர, அகலம் 3 மீ., அளவில் உள்ளதால், பொது மக்கள் நெருக்கடியின்றி நடந்து செல்ல முடியும்.
ஏழு பாலங்களிலும், மின் துாக்கி வசதி செய்யப்படுகிறது. இதனால், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட அனைவரும் எளிதாக பாலத்தில் ஏறி, சாலையைக் கடக்க முடியும்.
தற்போது, 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின், பொதுமக்கள் பாதுகாப்பாக ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முடியும். வாகன ஓட்டிகளும் இடையூறின்றி பயணிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!