அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மே 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. 2 நாட்களுக்கு முன்னதாக கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானிலை நிலவரம் மாறி மிதமான மழை பதிவானது.
இந் நிலையில் வரும் 5ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.
மேலும், மே 6ம் தேதி ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்குகிறது. இந்த வெயில் தொடங்கி அடுத்த நாளே மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
