விவசாய தம்பதியர் கொலை ; உ.உ.க., கண்டனம்

பல்லடம்: உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து கூறியதாவது:

சிவகிரி அருகே, தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்பதி ராமசாமி - - பாக்கியம்மாள் ஆகியோர், 2 நாள் முன், கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டது வருத்தத்தை அளிக்கிறது. சில மாதம் முன், சேமலைகவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தினர் மூன்று பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில், கொலையாளிகள் இதுவரை சிக்காத நிலையில், தற்போது, கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஈரோடு மாவட்டத்தில் இன்னொரு தம்பதியர் படுகொலை செய்யப்பட்டது விவசாயிகளை பதைபதைக்க வைக்கிறது.

கடந்த ஓராண்டுக்கு முன், பல்லடம் - கள்ளக்கிணறு பகுதியில், நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு, அடுத்தடுத்து விவசாய குடும்பத்தினரை மையப்படுத்தியே திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. ஆனால், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என மேடைதோறும் மார்தட்டி பேசுகின்றனர். விவசாயிகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் குற்ற சம்பவங்களை கண்டறிய வேண்டியது போலீசாரின் கடமை. ஆனால், காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர், இது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்த பின்னும், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.

காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர், காவல்துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement