ஏரிநீர் பாசன கால்வாயில் குப்பை கொட்டும் அவலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில், சீத்தாவரம், காவணிப்பாக்கம், பேரணக்காவூர், மாம்பாக்கம், அரும்புலியூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், அரும்புலியூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளையொட்டி, ஏரிநீர் பாசன கால்வாய் செல்கிறது.

இதை பயன்படுத்தி, அப்பகுதியில் உள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பாசன கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.

தற்போது, குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, ஊராட்சி நிர்வாகத்தினர் கால்வாயில் கொட்டி வருகின்றனர். இதனால், பாசன கால்வாய் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், கால்வாய் மண்ணால் தூர்ந்த நிலையிலும் உள்ளது. எனவே, ஏரிநீர் பாசன கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுத்து, கால்வாயை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement