சங்கராபுரம் அருகே தீ விபத்து ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பேக்கரி மற்றும் டயர் கடையில் தீ பிடித்து எரிந்ததில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 50; இவர் சங்கராபுரம் - தேவபாண்டலம் சாலையில், தகர ெஷட் அமைத்து பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு கடையை முடிவிட்டு முருகன் வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவு 12:00 மணி அளவில் கடையினுள் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.

அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி பக்கத்தில், தேவபாண்டலத்தைச் சேர்ந்த சக்திவேல், 52; என்பவருக்கு சொந்தமான டயர் ரீடிரேடிங் கடையிலும் தீ பிடித்தது.

தகவலறிந்து வந்த சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தினர் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பேக்கரி கடையில் இருந்த டேபிள்கள், சேர், பிரிட்ஜ் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், டயர் கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பொருட்கள் எரிந்து சேதமானது.

சங்கராபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement