சிவகாசி அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவிகள் விடுதிக்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது

சிவகாசி : சிவகாசியில் 8 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதி கல்லுாரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் சொந்த கட்டடம் கட்டப்படாததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படாமல் கிராமப்புற மாணவிகள் தவித்து வருகின்றனர்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் 2016 ல் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது. அப்போது அரசு ஆதி திராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியும் நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. 2023 ல் ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதி, கல்லுாரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டு, 64 மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது இந்த விடுதி சாட்சியாபுரத்தில் உள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதியில் இயங்கி வருகிறது. சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு முதுகலை உட்பட 12 பாடப்பிரிவுகள் உள்ளதாலும், விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைப்பதாலும் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தேனி, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இதில் 60 சதவீதத்திற்கும் மேல் மாணவிகள் உள்ளனர். கல்லுாரி மாணவிகள் விடுதி தற்காலிகமாக மாணவர் விடுதி கட்டடத்தில் செயல்படுவதால், இடங்கள் அதிகரிக்கப்படாத நிலையில் பெரும்பாலான கிராமப்புற மாணவிகள் தனியார் விடுதிகளிலோ அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவிகள் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகாசி அரசு கல்லுாரி அருகே விடுதி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், எந்த முன்னேற்றமும் இல்லாததால் மாணவிகள் சிரமத்தில் உள்ளனர். எனவே கல்லுாரி அருகே 200 இடங்களுடன் கூடிய மாணவிகள் விடுதி கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement