ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

14

ஈரோடு: தமிழகத்தையே உலுக்கிய ஈரோடு இரட்டைக் கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தம்பதியின் உறவினர்களை பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம். இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் இருந்த போது, மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டினுள் இருந்த 12 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது.


சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள், இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர். தம்பதி கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.


இந்நிலையில் உயிரிழந்த வயதான தம்பதியின் உறவினர்களை தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார். அசாதாரணமான சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து, அவர் ஆறுதல் கூறினார்.


இது குறித்து அண்ணாமலை தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;


இன்றைய தினம், சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட .ராமசாமி, பாக்கியம்மாள் ஆகியோரின் இல்லத்துக்குச் சென்று, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.


குற்றம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறித்து, அவர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உறுதுணையாக, தமிழக பா.ஜ.,தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொண்டோம்.


தனியாக வசித்து வருபவர்களைக் குறி வைத்து, தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களைத் தடுக்க, தி.மு.க., அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தி.மு.க., அரசு முற்றிலும் செயலற்றுப் போய் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

Advertisement