சிறுமி பலாத்காரம் வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, சென்னை, சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எட்டு வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். 2023 பிப்., 18ம் தேதி, சிறுமி வீட்டின் வெளியே சைக்கிள் ஓட்டிய போது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 51, என்பவர், வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் மைதிலி தேவி ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அதன் பின், வெங்கடேசனுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.