4 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மையத்தின் அறிக்கை




தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராமேஸ்வரம், விருத்தாச்சலம், சீர்காழி ஆகிய இடங்களில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டம் வேப்பூர், சேத்தியாத்தோப்பு, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் தலா, 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மாவட்டங்களின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்யலாம். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 11ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement