முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்த உத்தரவு

2


புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்த தமிழகம் மற்றும் கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூரிய காந்த், திபாங்கர் தத்தா, கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு முறையும் தமிழக அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறுகிறது. எனினும், அதை செயல்படுத்த கேரளா முட்டுக்கட்டை போடுகிறது என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், பிரச்னை நீண்ட நாட்களாக இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா? மத்திய அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அணை பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.


இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த மாதம் கூட்டம் நடந்தது. பெரியாறு அணை, பேணி அணையை பலப்படுத்த தமிழகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கேரளாவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்க கேரளாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதலில் பராமரிப்புக்கு அனுமதி அளிப்பதாக கூறிய கேரளா பிறகு அனுமதி மறுத்தது எனக்கூறினார்.



இதனையடுத்து நீதிபதிகள் அணை பாதுகாப்பு குறைபாடாக உள்ளது என தொடர்ந்து கூறும் கேரளா, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது கிடையாது. முதலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.



கேரள அரசு வழக்கறிஞர் கூறுகையில், தமிழக அரசை பொறுத்தவரை அணையை பராமரிக்க விருப்பம் காட்டவில்லை. நீர் மட்டத்தை உயர்த்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.


இதற்கு நீதிபதிகள் பொதுவான குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். தமிழக அரசு எங்கே தெரிவித்தது என்பதை காட்டுங்கள் என்றனர்.


மேலும் தற்போது அணை பராமரிப்பு தற்போது அவசியம் எனக்கூறிய நீதிபதிகள், அணை பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வை குழுவின் பரிந்துரையை செயல்படுத்த இரண்டு மாநிலங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரளாவின் குற்றச்சாட்டையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

Advertisement