இந்திய-பாக்., எல்லையில் 2 நாள் போர் பயிற்சி: இந்திய விமானப்படை அறிவிப்பு

புதுடில்லி: இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்குப் பகுதியில் நாளை மே-7 முதல் 8ம் தேதி வரை இரண்டு நாள் போர்ப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகஇந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்-22ம் தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருவதில் உறுதியாக உள்ள இந்தியா, அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளை 7 ம் தேதி நாடு முழுவதும் போர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய விமானப்படை நாளை (மே-7) முதல் இரண்டு நாட்கள் பெரிய அளவிலான போர்ப்பயிற்சி மேற்கொள்ளும்படி, விமானப்படை வீரர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை அறிக்கை:
நாளை மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்குப் பகுதியில் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படும். வழக்கமான தயார்நிலைப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தப் பயிற்சியில், ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை, முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும். போருக்கான தயார்நிலையின் ஒரு பகுதியாக, வான்வெளி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி இந்தியாவின் ராணுவத் தயார் நிலையின் நிரூபணமாக மேற்கொள்ளப்படுகிறது. இது விமானிகள் மற்றும் வான்வழி சேவைகளுக்கு ஒரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையாகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


