சிறுக சிறுக சேமித்த பணத்தை அரித்த கரையான் *பெண் கூலி தொழிலாளி கண்ணீர்

பூவந்தி:பூவந்தி அருகே கிளாதரி கக்கனாம்பட்டி கிராமத்தில் சிறுக சிறுக சேர்த்த ஒரு லட்ச ரூபாயை கரையான் அரித்ததால் கூலி தொழிலாளி குடும்பம் திகைத்து போயினர்.

சிவகங்கை மாவட்டம் கிளாதரி கக்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகருப்பி 30, கணவர் குமார் 35. இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் கூரை வீட்டில் வசிக்கிறார். அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி தகர உண்டியலில் சேமித்து வந்துள்ளார். கூரை வீடு என்பதால் பாதுகாப்பிற்காக வீட்டினுள் குழி தோண்டி உண்டியலை புதைத்துள்ளார்.

மகள் காதணி விழாவிற்காக சேமித்து வைத்ததை இரு மாதங்களுக்கு முன் வெளியே எடுத்து எண்ணும் போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்துள்ளது.

நேற்று காலை தகர உண்டியலை தோண்டி எடுத்துள்ளார். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தகரத்தை கரையான் அரித்து உள்ளே இருந்த 500 ரூபாய் நோட்டுகளையும் அரித்துள்ளது. வங்கியில் கரையான் அரித்த பணத்தை மாற்றலாம் என கூறியதை அடுத்து சிவகங்கை வங்கிக்கு சென்றுள்ளனர். வங்கி அதிகாரிகள் கிழிந்த நோட்டுகளை தான் மாற்ற முடியும், கரையான் அரித்த நோட்டுகளை மாற்ற நீங்கள் சென்னைக்கு தான் செல்ல வேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளனர். ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்த பணம் கரையான் அரித்ததால் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

Advertisement