விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள்: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: ''சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் காண்பிப்பதில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றன'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.
5ம் ஆண்டு
அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த 2021ல், ஆறாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைந்தது; மே 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றேன். தி.மு.க., அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தேர்தல் அறிக்கையில் கூறியதில், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். அதில், சொல்லாத பல திட்டங்களையும், தொலை நோக்குப் பார்வையோடு, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும், புதிய திட்டங்களை அறிவிக்கிறோம்; நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சாதனை திட்டத்தின் துவக்க நாளாக இருந்து கொண்டிருக்கிறது.
எந்த மாதிரியான சூழலில், ஆட்சி பொறுப்பை ஏற்றோம் என்பது, எல்லோரையும் விட பத்திரிகையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த, பத்தாண்டு கால நிர்வாகம் ஒரு பக்கம்; மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலை ஒரு பக்கம்; தமிழகத்துக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும், மத்திய அரசு இன்னொரு பக்கம்; இதையெல்லாம் சமாளித்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான், எனக்குள் இருந்தது.
நெருக்கடிகள்
சரியான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு, இந்த நான்காண்டு கால அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது. அரசுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கொள்கை அரசு; இன்னொன்று சேவை அரசு.
தி.மு.க., அரசை பொறுத்தவரை, கொள்கை - சேவை என இரண்டிலும், சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தன. எவ்வளவு அவதுாறுகள் பரப்பப்பட்டன என்பது, பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும்.
இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை. எந்த சூழ்நிலையிலும், மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் சோர்ந்து போகவில்லை. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில், பத்திரிகையாளர்களின் பங்கு மிக அதிகம்.









