ஒருபுறம் அதிகாரிகள் 'டார்ச்சர்': மறுபுறம் பொதுமக்கள் எதிர்ப்பு கட்டாய வரி வசூலால் ஊராட்சி செயலர்கள் தவிப்பு

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகளில் கட்டாய வரி வசூல் செய்யுமாறு அதிகாரிகளின் 'டார்ச்சர்' மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பால், ஊராட்சி செயலர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்துார், புழல், பூண்டி, சோழவரம் உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன.

இங்குள்ள ஊராட்சிகளில் வரி வசூல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் செயலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஊராட்சிகளில் வரி சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கூரை வீடுகளுக்கு சதுர அடிக்கு 40 காசு, ஓட்டு வீடுகளுக்கு 60 காசு, கான்கிரீட் வீடுகளுக்கு 1 ரூபாய் என, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக கான்கிரீட் வீடுகளுக்கு 300 முதல் 1,000 ரூபாய் வரை வரி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு கிராமங்களில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போதும், சில ஊராட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் முறைகேடால், பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய்கள் முழுமையாக இணைக்கப்படவில்லை.

கணக்கில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களிலும் முழுமையாக தண்ணீர் விநியோகம் செய்வது இல்லை.

தற்போது மாவட்டத்தில், 100 சதவீத வரி வசூலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில், தினமும் ஊராட்சி செயலர் வரி வசூல் செய்து, அதை அறிக்கையாக அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வரி வசூலிக்காத ஊராட்சி செயலர்களிடம், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கடுமை காட்டுகின்றனர்.

கிராம பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, 100 நாள் வேலை திட்டத்திற்கான பணம் முழுமையாக வரவு வைக்கப்படாததால், கிராம மக்கள் வரி கட்டுவதில் சுணக்கம் காட்டுகின்றனர்.

ஊராட்சி செயலர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை செலுத்தி, 'முழு வரி வசூல்' என, அதிகாரிகளுக்கு கணக்கு காட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

Advertisement