இரும்பு பாலம் அமைக்கும் பணி 'ஓவர்' நான்கு குழாய் பொருத்தும் பணி தீவிரம்

கோவை : போத்தனுாரில் குடிநீர், யு.ஜி.டி., திட்டத்துக்கு குழாய் கடந்து செல்லும் விதமாக இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ளது; இரு நாட்கள் குழாய் பொருத்தும் பணி நடக்கிறது.

மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட போத்தனுாரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி-குனியமுத்துார் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம்(யு.ஜி.டி.,) செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென குழாய்கள் பதிக்கும் பணி நடந்துவருகிறது. இதன் ஒருபகுதியாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, பாலக்காடு ரயில்வே பாதைக்கு மேலேயும், பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடியிலும் இரும்பு பாலம் அமைத்து, குழாய்கள் கடந்து செல்ல வழிவகை செய்யப்படுகிறது.

இதற்கென, நேற்று முதல் நாளை வரை, அவ்வழித்தடத்தில் தினமும் மதியம், 1:30 முதல், 3:00 மணி வரை ரயில்கள் இயக்கம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நேற்று ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ள நிலையில், குழாய்கள் பொருத்தும் பணி இன்றும், நாளையும் நடக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இரும்பு பாலத்தின்மீது, 24 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் திட்டத்துக்கும், யு.ஜி.டி., திட்டத்துக்கும் குழாய்கள் பொருத்தப்படுகின்றன. இதில், யு.ஜி.டி., திட்டத்துக்கு, 800 மி.மீ., மற்றும் 600 மி.மீ., விட்டம் உடைய குழாய்களும், குடிநீர் திட்டத்துக்கு, 350 மற்றும் 300 மி.மீ., விட்டம் கொண்ட குழாய்களும் பொருத்தப்படுகின்றன.

'இந்த நான்கு குழாய்கள் பொருத்தும் பணி, இரு நாட்களில் முடிக்கப்படும்' என்றனர்.

Advertisement