மாத்துார் ஊராட்சியில் சாலை மறியல்

கச்சிராயபாளையம் : மாத்துார் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சியில், 5 மற்றும், 6வது வார்டில், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதி மக்கள், மாத்துார்- கச்சிராயபாளையம் சாலையில் நேற்று காலை 8:30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார், ஊராட்சி தலைவர் உமாராஜன், துணைத் தலைவர் அலமேலு வீரமணி ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி, உடனடியாக குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனால் காலை 9:00 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement