'போதையால் கொலைகள் உச்சம்'

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து விட்டது. பட்டுக்கோட்டையில் பா.ஜ., முன்னாள் நிர்வாகி தலை துண்டித்து, கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல், சிவகிரியில் வயோதிகர்கள் இருவரை, கொள்ளையர்கள் கைகளை வெட்டியும், காதுகளை அறுத்தும் கொடூரமாக கொலை செய்த சம்பவம், பேரதிர்ச்சி அளிக்கிறது.

கொங்கு பகுதியில், பெரும்பாலும் தோப்புகளில்தான் வீடு கட்டி மக்கள் வசிக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக எவ்வித பயமுமின்றி வசிப்பவர்கள், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், தோட்டங்களையும், தோப்புகளையும் காலிசெய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிவகிரி சம்பவம், மக்களிடம் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் மட்டும் சமீபத்தில், ஏழு கொலைகள் நடந்துள்ளன.

இரு சம்பவங்களிலும், வீட்டில் உள்ள நாயை ஒரு வாரத்துக்கு முன்பே விஷம் வைத்துக் கொன்றிருக்கின்றனர். இப்படித்தான், கொலையாளிகள் திட்டம் போட்டு செய்துள்ளனர். இதையெல்லாம் கண்டுபிடித்து, கொலை சம்பவங்கள் நடக்காமல் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்து காவல் துறை தவறிவிட்டது.

கொலையாளிகளை கண்டுபிடிக்க, மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement