'டார்க் நைட்' கொள்ளை - கொலை ரோந்துப்பணியில் கவனம் அவசியம்

திருப்பூர் : 'கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கும்மிருட்டு நிலவும் 'டார்க் நைட்' எனப்படும் அமாவாசை நாட்களில் தான் 'கைவரிசை' காட்டுவர்; கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர் கொலை, கொள்ளைகளும் 'டார்க் நைட்'டில் தான் அரங்கேற்றப்படுகின்றன' எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோரை கொலை செய்து, பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவம், சமீபத்தில், அதிகளவில் நடந்து வருகிறது.

சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இத்தகைய சம்பவம் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்போர் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் சிலர் கூறியதாவது:

தற்போது மட்டுமின்றி, காலம்காலமாகவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், கும்மிருட்டு நிலவும், அமாவாசை இரவில் தான் தங்களின் கைவரிசையை காண்பிப்பர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்டதும் கூட, அமாவாசை நாளில் தான். இதனால் தான், 'டார்க் நைட்' ரோந்து பணியில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, காவல் துறை துவங்கி காலம் தொட்டே, பாதுகாப்பு நடைமுறை இருந்து வருகிறது.

அமாவாசை ஒட்டிய, 10 நாட்களில் நிலவும் கும்மிருட்டு சமயங்களில் போலீசாரின் இரவு ரோந்துப்பணியை அதிகப்படுத்த வேண்டும்.

ஆனால், தற்போதைய சூழலில், திருப்பூர் மட்டுமின்றி பல இடங்களில், இரவு ரோந்து பணி மேற்கொள்ள போதிய போலீசார் இல்லை. போலீஸ் எண்ணிக்கை குறைவால், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகளவில் நடக்கின்றன.

எனவே, இரவு ரோந்து போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்; ரோந்து பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement