புதிதாக 746 பஸ்கள் வாங்க 'டெண்டர்' வெளியீடு

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 746 பஸ்கள் வாங்க 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் வைத்து, அரசு போக்குவரத்து கழகங்களில், டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்கள் வாங்கப்படுகின்றன. தற்போது, ஏழு போக்குவரத்து கழகங்களில், சோதனை முயற்சியாக, 23 சி.என்.ஜி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பத்தால் ஒரு கி.மீ.,க்கு 3 ரூபாய் முதல், 4 ரூபாய் வரை மிச்சமாகிறது. எனவே, சி.என்.ஜி., தொழில்நுட்ப பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சி.என்.ஜி., பஸ்களில், பராமரிப்பு செலவு, இயக்கச்செலவு வெகுவாக குறைகிறது. ஒரு பஸ்சுக்கு மாதம், 75,000 ரூபாய் வரை மிச்சமாகிறது. எனவே, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 746 சி.என்.ஜி., தொழில்நுட்ப பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக, டெண்டர் வெளியிடப்பட்டு, நிறுவனம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நிறுவனம் தேர்வு செய்த பிறகு, தயாரிப்பு பணி ஆணை வழங்கிய ஆறு மாதங்களில், புதிய பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினர்.

Advertisement