பழவேற்காடில் மீனவர் வலையில் சிக்கிய 82 கிலோ பால்சுறா மீன்

பழவேற்காடு, மே 9-
பழவேற்காடு மீனப்பகுதியில் கடல் மற்றும் ஏரியில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனின் இனப்பெருக்கத்திற்காக கடந்த மாதம், 14ம் தேதி நள்ளிரவு முதல், 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது.
இந்த தடைக்காலம் விசைப்படகு மற்றும் இயந்திர படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பழவேற்காடு பகுதியில் பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்ய எந்த தடையும் இல்லை.
பழவேற்காடில் பெரும்பாலான மீனவர்கள் தடைகாலத்தை பின்பற்றி வருகின்றனர். ஒரு சிலர் அன்றாட வருவாய்க்காக பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.
நேற்று அதிகாலை, கடலில் மீன்பிடிக்க சென்ற பழவேற்காடு பகுதி மீனவர்கள் வலையில், நான்கு அடி நீளம் கொண்ட பெரிய அளவிலான பால்சுறா மீன் ஒன்று சிக்கியது.
மீனவர்கள் அதை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து எடைபோட்டபோது, 82 கிலோ இருந்தது. இது, 50,000 - 60,000 ரூபாய் வரை விலை போகும்.
மொத்த விற்பனையாளர் வாயிலாக இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில், சூறை, அயிலா, கிழங்கான் உள்ளிட்ட மீன்களே கிடைக்கும் நிலையில், நேற்று ராட்சத பால்சுறா மீன் கிடைத்து உள்ளது.