விரிசல் விடும் நெடுஞ்சாலை

பல்லடம்: பல்லடம் - -பொள்ளாச்சி ரோட்டில் ஏற்பட்டு வரும் விரிசல்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

பல்லடம்- பொள்ளாச்சி ரோடு, காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்தை இணைக்கிறது.

கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால், ஏராளமான கண்டெய்னர் லாரிகள், கறிக்கோழி வாகனங்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்டவை அதிக அளவில் இவ்வழியாக வந்து செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், காமநாயக்கன்பாளையம் அருகே துவங்கி, சுல்தான்பேட்டை வரை, நான்கு வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், பல்லடம் -- காமநாயக்கன்பாளையம் வரை நெடுஞ்சாலை, நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

ரோட்டில், சேதமடைந்த இடங்களில், சாலைகள் ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும், சாலையின் பெரும்பாலான இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இது இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாய் உள்ளது. விரிசல்களில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டுப்பாட்டை இழக்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விபத்துகளை தவிர்க்க, போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி ரோட்டை, முழுவதுமாக, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement