அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், கலை அறிவியல், இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேருவதற்கான இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உட்பட இளநிலையில் மட்டுமே, 22 பாடப்பிரிவுகள் உள்ளன.

முதல் ஷிப்ட்டில் 19 பாடப்பிரிவுகள், இரண்டாம் ஷிப்ட்டில், மூன்று பாடப்பிரிவுகளும் உள்ளன. சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று முதல் துவங்கியுள்ளது. மாணவர்கள், மொபைல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் வாயிலாக சேர்க்கை பதிவு செய்யலாம். கல்லுாரியிலும், மாணவர்கள் சேர்க்கைக்கான தகவல் வழிகாட்டு மையம் காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை செயல்படுகிறது.

மாணவர்கள் முதலில் பெயர், இ - மெயில் முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட விபரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். பின், கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்.

விண்ணப்ப பதிவு, பதிவு கட்டணம் குறித்து தகவல் பெறுவதற்கு, கல்லுாரி வழிகாட்டி மையங்களை அனுகலாம்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளில், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு, சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

மாணவர்களின் தரவரிசைப்பட்டியல், மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement